பாஸ்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு

பாஸ்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு
(18-05-2014)

 

முதல் ஆண்டு

 

முன்னுரை

பாஸ்கா கால ஐந்தாம் ஞாயிறுக்கு வந்துள்ள உங்களை மனதார வாழ்த்தி வரவேற்பதிலே மகிழ்ச்சி.

உள்ளம் கலங்க வேண்டாம் என்று நம்மோடு இலருந்து நம்மை ஊக்குவிக்கும் இறைவன் இயேசு பெயரால் வரவேற்பதிலே மகிழ்ச்சி.

எல்லாம் முன்னேற்றத்தை நோக்கி செல்ல, கலக்கம் அதிகரிக்கத் தான் செய்கின்றது.

கடத்தப்பட்ட விமானம், வளர்ந்த விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்க இயலாது போய் நிற்கின்றது.

வளர்ந்த மருத்துவத்தால் புற்றுநோயை கட்டுப்படுத்த இயலவில்லை.

நடந்து சென்று பத்திரமாக வீடு வந்து சேர்வது பெரிய காரியமாக நினைக்கப்படுகின்றது, அன்றாட சாலை விபத்துக்களில்.

படித்த மனிதர்கள் மனிதாபிமானம் இன்றி செய்யும் காரியங்களை பார்க்கும் போது, என்ன சமூகம் இது என்ற கலக்கம்.

உள்ளம் கலங்க வேண்டாம், என்னிலே நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற வாக்கு இன்றைக்கு நம்முடைய நம்பிக்கையை வளர்த்தெடுகின்றதா?

பலியிலே இந்த கேள்வியோடு பங்கேற்று பயன்பெறுவோம்.

 

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள்  6: 1-7)

 

திருத்தூதர்களின் முதற்பணி இறை வேண்டலிலும், இறை  வார்த்தையை அறிவிப்பபதும் ஆகும். வேறு எந்தப் பணியும் திருத்தூதரின்  இந்த இறைப்பணிக்கு இடஞ்சலாக இருக்கக் கூடாது. எனவே பந்தி பரிமாறுவதில் ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்க்க ஏழு திருத்தொண்டர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்டுப்போம்.

 

முதல் வாசகம்

தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7

அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.

ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 33: 1-2. 4-5. 18-19. (பல்லவி: 22)

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

அல்லது: அல்லேலூயா.

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

 

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 2: 4-9)

 

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய நாம் எவ்வாறு ஒழுக (வாழ) வேண்டும் என்பதற்கு இயேசுவே உதாரணம். நாம் அரச குருத்துவ திருக்கூட்டம். கடவுள்  தம் மக்களை எப்படி எகிப்திலிருந்து கூட்டி வந்தாரோ அவ்வாறே நம்மை இங்கிருந்து வானகம் கூட்டிச் செல்வார். இதை நம்புவோருக்கு கிறிஸ்துவே அடிக்கல், நம்பாதோருக்கு தடைக்கல் என்று கூறும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

 

இரண்டாம் வாசகம்

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 4-9

அன்பிற்குரியவர்களே, உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர் மதிப்புள்ள கல் அதுவே. நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக!

ஏனெனில், “இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்” என்று மறைநூலில் காணக்கிடக்கிறது. நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர் மதிப்புள்ளதாக விளங்கும்.

நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், “கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று.” மற்றும் அது, “இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும்” இருக்கும்.

அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள்; இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை, என்கிறார் ஆண்டவர், அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

வழியும் உண்மையும் வாழ்வும் நானே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், `உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றார்.

தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” என்றார்.

இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார்.

அப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.

இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்.

அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

 

உயிர்ப்பு ஞாயிறு – 5

பந்தியில் பரிமாறும் பணிக்கு மேலாக கடவுளது வார்த்தையைத்தான் முதலாவது கற்பிக்க வேண்டும் என்று கருதி நற்சான்று பெற்றவர்களும், தூய ஆவியின் அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களான எழுவரை சீடர்கள் தேர்ந்தெடுத்தார்கள். திருத்தூதர்கள் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.

இயேசு கிறிஸ்துவின் வழியாய் ஆவிக்குரிய இல்;லமாகக் கட்டியெழுப்பப்பட்டு, தூய குருக்களின் கூட்டமாகவும் ஆவிக்குரிய பலிகளைப் படைக்கிறார்கள். அன்றும் மொழி, இனம், சாதி அடிப்படையில் பிரிவினைகள் நீங்கப் பணிசெய்யுமாறு சீடர்களைத் தேர்ந்தெடுத்தது போன்றே இன்றும் வேறுபாடுகள் நீங்க ஏற்புடைய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கடமையும் பொறுப்பும் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் இருக்கிறது. காலத்தின் கட்டாயமாகக் கருதி தூய ஆவியின் துணையோடு திருச்சபையின் பணிகளுக்கும் கடவுளின் வார்த்தைக்கும் கீழ்படிந்து நாமும் உயிர்த்த ஆண்டவருக்குச் சான்று பகர்வோம்.

 

மன்றாட்டு

        திருஅவையை முன்னெடுத்து செல்லும் அனைவரையும், எம் தலைமை ஆயனையும், தள ஆயர்களையும் ஆசீர்வதித்து, வாழ்வும், வழியுமான உம்மை ஆன்மாக்கள் அடைய வழிகாட்டியாக இருந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பாரத 16வது நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள யாவரையும் ஆசீர்வதித்து, மத இன மொழி வேற்றுமைகளை கடந்து பாரதத்தை வல்லரசாக மாற்றிட  ஆவியின் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உள்ளம் கலங்கி வழி தெரியாது நிற்போரை உம் ஆவியினால், அன்பினால் ஒருங்கிணைத்து, உம்மிலே வழியும், வாழ்வும் உண்டு என்ற நம்பிக்கையை பெற்றுக் கொள்ள அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தேர்வு செய்யப்பட்ட மக்கள் நாங்கள், அழைத்தவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவித்து வாழ, ஆவியின் துணை தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விடுமுறை காலங்களில் எம் குழந்தைகள் கற்ற மறைப் போதனைகளை வாழ்வாக்கிடவும், அதனையே வாழ்வின் வரிச்சட்டமாக கொண்டிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Leave a comment