பொதுக்காலம் மூன்றாம் வாரம்
சனிக்கிழமை
மாற்கு 4: 35-41
ஏன் அஞ்சுகிறீர்கள்?
நிகழ்வு
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த மிகப்பெரிய கவிஞர் வில்லியம் காப்பர். இவருக்கு முப்பத்து இரண்டு வயது நடந்துகொண்டிருக்கும்போது, தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்தார். இதனால் இவர் தற்கொலை செய்து இறந்துபோய்விடலாம் என்ற முடிவுக்கு செய்தார். இதன் பொருட்டு இவர் நஞ்சுண்டு இறக்க முயற்சி செய்தார். அம்முயற்சி தோல்வியில் முடியவே தேம்ஸ் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து இறக்க முயற்சி செய்தார். இதுவும் தோல்வியில் முடிந்தது.
இதற்குப் பின்பு இவர் கத்தியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார். இவர் கத்தியில் விழ முயற்சித்தபொழுது, இவருடைய எடை தாங்காமல் கத்தி முறிந்துபோனது. பின்னர் தூக்கிப் போட்டு இறக்க முயற்சி செய்தார். இதுவும் தோல்வியில் முடிந்ததால், வாழ்க்கையை வெறுத்துப் போனார். இந்நிலையில் இவர் ஒருநாள் திருவிவிலியத்தை எடுத்து வாசிக்கையில், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் இவருடைய உள்ளத்தில் நம்பிக்கையையும் துணிவையும் ஊட்டன. இதற்குப் பின்பு இவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, கடவுள் தனக்குக் கொடுத்த திறமைகளைக் கொண்டு, கவிதைகளைப் புனையவும் கிறிஸ்தவப் பக்திப் பாடல்களை இயற்றவும் தொடங்கினார்.
தற்கொலை செய்துகொண்டு வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த வில்லியம் காப்பருக்கு ஆண்டவருடைய வார்த்தை நம்பிக்கையையும் துணிவையும் ஊட்டின. அதுபோன்று இன்றைய நற்செய்தி வாசகத்தில், கடலில் ஏற்பட்ட பெரும் புயலைக் கண்டு அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளிப்பவையாக இருக்கின்றன. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
புயற்காற்றை அடக்கிய இயேசு
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களோடு கடலில் பயணம் செய்கின்றபோது வீசுகின்ற புயற்காற்றை அடக்குவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த வல்ல செயல் நமக்கு உண்மைகளை எடுத்து எடுத்துக்கூறுகிறது. ஒன்று, இயேசு இறைமகன். இரண்டு, அவர் நம்மோடு இருந்து நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார். இந்த இரண்டையும் குறித்து சற்று விரிவாக சிந்தித்துப் பார்ப்பாம்.
திருப்பாடல் 107:29 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்;. கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.” அதைப்போன்று திருப்பாடல் 65:7 இல் இவ்வாறு வாசிக்கின்றோம்: “கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்.” இந்த இரண்டு இறைவார்த்தைப் பகுதிகளும் ஆண்டவராகிய கடவுளுக்கு எல்லாமும் கட்டுப்படும் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றன. இயேசு கடலில் ஏற்பட்ட புயல் காற்றை “இரையாதே, அமைதியாய் இரு” என்ற வார்த்தைகளைச் சொல்லி அடக்குவதன் மூலம் அவர் ஆண்டவர், இறைமகன் என் உண்மையை மாற்கு நற்செய்தியாளர் எடுத்துக் கூறுகின்றார்.
நம்மோடு இருந்து, நம்பிக்கையூட்டும் இயேசு
இயேசு கிறிஸ்து சாதாரணமான ஒருவர் அல்லர்; அவர் இறைமகன் என்று எடுத்துக் கூறிய மாற்கு நற்செய்தியாளர், அவர் நம்மோடு இருந்து, நமக்கு நம்பிக்கையூட்டுகின்றார் என்ற உண்மையையும் எடுத்துக் கூறுகிறார். அது எவ்வாறு என்று பார்ப்போம்.
இன்றைய நற்செய்திப் பகுதியை, கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலத் திருஅவையோடு ஒப்பிடலாம். தொடக்கக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஏராளமான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நடைபெற்றன. இவற்றிற்கு அஞ்சி ஒருசிலர் கிறிஸ்துவை மறுதலிக்கத் தொடங்கினார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இயேசு கூறுகின்ற, “ஏன் அஞ்சுகிறீர்கள். உங்களுக்கு இன்னும் நம்பிக்கையில்லையா?” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. இயேசுவின் இவ்வார்த்தைகள் இயேசுவின் சீடர்களுக்கும் தொடக்கக்கால கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமல்லாது, நமக்கும் நம்பிக்கையளிக்கக் கூடியவையாக இருக்கின்றன்.
ஆம். வாழ்க்கை என்ற கடலில் பயணிக்கின்றபோது எதிர்வரும் சவால்கள், குழப்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றால நம்முடைய வாழ்க்கையே முடிந்துபோய்விட்டதென நினைத்து அஞ்சி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இறைவன் நம் அருகில் இருந்து நம்மைத் தேற்றியும் திடப்படுத்திக்கொண்டும் இருக்கின்றார். எனவே நாம் இறைவனின் உடனிருப்பிலும் அவருடைய பராமரிப்பிலும் முழுமையான நம்பிக்கை வைத்து, நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதே சிறந்தது.
சிந்தனை
‘அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கிறேன்’ (எசா 43:5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் இறைவனின் உடனிருப்பிலும் பாதுகாப்பிலும் நம்பிக்கை வைத்து, நம்பிக்கையோடு நம் வாழ்க்கையை எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.