ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்
I மலாக்கி 3: 1-4
II எபிரேயர் 2: 14-18
III லூக்கா 2: 22-40
ஆண்டவருக்கு உன்னை அர்ப்பணி
நிகழ்வு
மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையை ஆண்டுவந்தவன் கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ். இவன் கி.பி 293 ஆம் ஆண்டு அரசனாகப் பதிவியேற்ற பொழுது, ஏராளமான கிறிஸ்தவர்கள் அரசவையிலும் அரண்மனையிலும் உயர்பதவிகளை வகிப்பதைக் கண்டான். அப்பொழுது இவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது. ‘கிறிஸ்தவர்களாக இருக்கின்ற இவர்கள் கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்கின்றார்களா…? இதை நாம் சோதித்துப் பார்ப்போம்…!’ என்பதே அந்த எண்ணம். உடனே இவன் “கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்க விரும்புகின்றவர்கள் தாங்கள் வகிக்கக்கூடிய பதவியை விட்டுவிடவேண்டும். பதவி வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்கவேண்டும்” என்று ஆணை பிறப்பித்தான்.
இவன் விடுத்த ஆணையைத் தொடர்ந்து இவனுடைய அரசவையிலும் அரண்மனையிலும் உயர்பதவி வகித்த பல கிறிஸ்தவர்கள், “எங்களுக்குப் பதவியை விட கிறிஸ்துவே முக்கியம்” என்று தாங்கள் வகித்து வந்த பதவியைத் துச்சமெனத் தூக்கியெறிந்தார்கள். ஒருசில கிறிஸ்தவர்களோ பதவிக்கு ஆசைப்பட்டு, கிறிஸ்தவை மறுதலித்தார்கள். இதையெல்லாம் பார்த்த கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ், கிறிஸ்துவுக்காகத் தாங்கள் வகித்த பதவிகளையும் துச்சமெனத் தூக்கியெறிந்த கிறிஸ்தவர்களை எல்லாம் மீண்டுமாக அவர்கள் வகித்துவந்த பதவியிலேயே அமர்த்தினான். அதே நேரத்தில் யாரெல்லாம் பதவிக்கு ஆசைப்பட்டுக் கிறிஸ்துவை மறுதலித்தார்களோ, அவர்களையெல்லாம் அவர்கள் வகித்து வந்த பதவியிலிருந்து தூக்கி எறிந்தான். இதற்கு இவன் சொன்ன காரணம், “கிறிஸ்துவுக்கு உண்மையாக இருப்பவர்கள் தாங்கள் வகிக்கின்ற பதவிக்கும் உண்மையாக இருப்பார்கள்” என்பதாகும்.
ஆம், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவருக்கு உண்மையுள்ளவராக, உகந்தவராக இருக்கவேண்டும். அதைதான் மேலே உள்ள நிகழ்வும் இன்று நாம் கொண்டாடகின்ற விழாவும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இன்று நாம் ஆண்டவர் இயேசு கோயிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு எப்படி ஆண்டவருக்கு உகந்தவராக வாழ்ந்துவந்தார்…? நாம் எப்படி ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ்வது…? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் ஆண்டவருக்கு உரியவர்கள்
இன்றைய நற்செய்தியில், தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபொழுது (நாற்பதாவது நாளில்) குழந்தை இயேசுவை, தாய் மரியாவும் யோசேப்பும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம் திருக்கோயிலுக்குச் சென்றார்கள் என்று வாசிக்கின்றோம். குழந்தையை ஏன் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை நாம் விடுதலைப் பயண நூலில் (விப 13: 2,12,15) வாசித்தறியலாம்.
மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டை விட்டுப் போக முற்பட்டபொழுது, பார்வோன் மனமிறுகி இஸ்ரயேல் மக்களைப் போகவிடாமல் தடுத்தான். இதைத் தொடர்ந்து எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண்பிறப்பு அனைத்தையும் ஆண்டவர் சாகடித்தார். அதே வேளையில் வீடுகளில் இரத்தம் தெளிக்கப்பட்ட இஸ்ரயேலரின் வீடுகளின் இருந்த ஆண் தலைபேற்றை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார். இதனலாயே ஆண்தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. குழந்தை இயேசுவின் தாய் மரியாவும் யோசேப்பும் திருச்சட்டத்தில் கூறப்பட்டவாறே குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கின்றார்கள். இவ்வாறு அர்ப்பணிக்கின்றபொழுது, இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளைப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றார்கள்.
மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவைக் கோவிலில் ஆண்டவருக்கு அர்ப்பணித்தது, நமக்கு இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றது. ஒன்று, அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள் என்பதாகும். இரண்டு, ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இயேசு எவ்வாறு ஆண்டவருக்கு உரியவர் ஆனாரோ, அதுபோன்று திருமுழுக்குப் பெற்ற அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு உரியவர்களாக இருக்கவேண்டும். இதை நாம் மறந்துவிடக்கூடாது
கடவுளுக்கு உகந்தவராய் இருந்த இயேசு
ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இயேசு, வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்து, ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் வாசிக்கின்றோம். இயேசு எப்படி ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்பது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இயேசு ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்பதை அவர் ஆண்டவரின் திருவுளத்தின்படி நடந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம். தன்னுடைய பன்னிரண்டு வயதிலேயே, “நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று சொன்ன இயேசு, தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தை தன்னிடம் ஒப்படைத்த அலுவல்களையே செய்துகொண்டிருந்தார் (யோவா 17:4) அல்லது தந்தையின் திருவுளத்தின்படியே நடந்தார்.. இன்னும் சொல்லப்போனால், இயேசு தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தன்னுடைய உணவாகக் கொண்டிருந்தார் (யோவா 4:34).
அப்படியானால், இயேசுவைப் போன்று கடவுளுக்கு உரியவர்களாகிய நாம், கடவுளுக்கு உகந்தவற்றை அல்லது கடவுளின் திருவுளத்தின்படி நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்முடைய விருப்பு வெறுப்புகளுக்கு முதன்மையான இடம் கொடுத்து, இறைவனின் விருப்பத்தையும் அவருடைய திருவுளத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவினைக் கொண்டாடும் நாம், ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம் என்னும் உறுதி ஏற்போம்.
பிற இனத்தாருக்கு ஒளியாகவும் இஸ்ரயேலுக்கு பெருமையாகவும் விளங்கிய இயேசு
ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்த, ஆண்டவரின் திருவுளத்தின்படி நடந்த இயேசுவின் வாழ்வு எப்படி இருந்தது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கான பதிலை நாம் எருசலேம் திருக்கோவிலில் இருந்த சிமியோன் இறைவாக்காக உரைக்கின்ற வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம். இயேசு இஸ்ரயேலின் பெருமையாகவும் புறவினத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாக இருப்பார் என்று அவர் கூறுகின்றார். இயேசுவின் பணிவாழ்வைப் பார்க்கின்றபொழுது, யூதர்களுக்கு மட்டுமல்லாது எல்லாருக்குமாக தான் செய்த பணியின் வழியாக அவர் ஒளியாக இருந்தார். அதனால்தான் எவ்வளவோ அவர் “நானே உலகின் ஒளி” (யோவா 8:12) என்று கூறுகின்றார்.
ஆண்டவருக்கு உரியவர்களாகிய நாம்… ஆண்டவரின் திருவுளத்தின்படி வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் நம்முடைய சொல்லாலும் செயலாலும் எல்லா மக்களுக்கும் – உலகிற்கே ஒளியாக இருக்கவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை.
சிந்தனை
‘இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்’ (கலா 2: 20) என்பார் புனித பவுல். இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்து வந்த புனித பவுல் கிறிஸ்துவே என்னுள் வாழ்கின்றார் என்ற உணர்வோடு வாழ்ந்தார். கடவுளுக்கு உரியவர்களாகிய வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம், கிறிஸ்துவே நம்முள் வாழ்கின்றார் என்ற உணர்வோடு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
– மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.