2 சாமுவேல் 12: 1-7a, 10b-17

பொதுக்காலம் மூன்றாம் வாரம்

சனிக்கிழமை

2 சாமுவேல் 12: 1-7a, 10b-17

 

“நீயே அம்மனிதன்”

 

நிகழ்வு

 

          ஒருநாள் மாவீரன் அலெக்சாண்டரிடம், படைவீரன் ஒருவன் மிகப்பெரிய தவறு  செய்துவிட்டதாக புகார் ஒன்று வந்தது. அவர் அதை விசாரித்துப் பார்த்தபொழுது அது உண்மையெனவும் தெரிந்தது.

 

உடனே அவர் குறிப்பிட்ட அந்தப் படைவீரனை அழைத்து விசாரணை நடத்தத் தொடங்கினார். “உன்மீது சுமத்தப்பட்டிருக்கின்ற இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக்கொள்கின்றாயா…?” என்றார் அலெக்சாண்டர். “ஆம். நான்தான் இந்தக் குற்றத்தைச் செய்தேன் என்று ஏற்றுக்கொள்கின்றேன்” என்றான் படைவீரன். சிறிதுநேரம் அமைதியாக இருந்த அலெக்சாண்டர் மீண்டுமாக அவனிடம், “உன்னுடைய பெயர் என்ன?” என்றார். “அலெக்சாண்டர்” என்று அந்தப் படைவீரன் சொன்னதும், ஒரு வினாடி ஆடிப் போய்விட்டார் அலெக்சாண்டர்.

 

பின்னர் அவர் அந்தப் படைவீரனிடம், “ஒன்று, ‘அலெக்சாண்டர்’ என்ற உன்னுடைய பெயரை மாற்றி வேறொரு பெயர் வை. இல்லையென்றால் இதுபோன்ற தவற்றினைச் செய்யாதே! அலெக்சாண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டு இப்படித் தவறு செய்வது எனக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றது” என்று சொல்லி அவனை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

 

இந்த நிகழ்வில் வருகின்ற படைவீரனைப் போன்று நாமும் கிறிஸ்தவன்/கிறிஸ்தவள் என்ற பெயருக்கு ஏற்ப வாழாமல், பாவத்தில் உழன்றுகொண்டிருக்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில், பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப வாழாமல், பாவம் செய்த தாவீது அரசரைக் குறித்து வாசிக்கின்றோம். தாவீது செய்த தவறு என்ன? அவர் எப்படித் தன்னுடைய தவற்றை உணர்ந்து மனம்வருந்தினார்? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

 

தாவீதின் தவற்றைச் சுட்டக்காட்டிய நாத்தான்

 

          தாவீது அரசர் உரியாவின் மனைவியான பத்சேபாவோடு தவறு செய்கின்றார். அந்தத் தவற்றினைச் செய்த பிறகு அவர் ஆறு மாதங்கள் எதுவுமே நடக்காது போல் காட்டிக்கொள்கின்றார் அல்லது அந்த தவற்றினை மறைப்பதற்கு முயற்சி செய்கின்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாத்தான் இறைவாக்கினர் அவரிடம் வந்து, மிகவும் நேர்த்தியாகப் பேசி, அவர் செய்த தவற்றினை அவரிடம் சுட்டிக்காட்டி, அவருடைய குற்றத்தை உணர வைக்கின்றார்.

 

நாத்தான் இறைவாக்கினர் ஏற்கெனவே, தாவீது அரசர் ஆண்டவருக்காகக் கோயில் கட்ட நினைத்தபொழுது, ஆண்டவரின் விருப்பத்தை அவரிடம் எடுத்துச் சொல்வார் (2 சாமு 7). இப்பொழுது அவர் தாவீது உரியாவின் மனைவியோடு தவறு செய்தபொழுது, அந்த தவற்றினை  மிகவும் நேர்த்தியாக அவரிடம் எடுத்துக்கூறுகின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது செய்த தவற்றினை அவரிடம் சுட்டிக்காட்டிவதற்குப் பயன்படுத்துகின்ற செல்வந்தர், ஏழை, அந்த ஏழையிடம் இருந்த ஆட்டுக்குட்டி பற்றிய உவமைக் கதை மிகவும் கவனிக்கத்தக்கது. ஒரு காலத்தில் தாவீது ஆடுமேய்த்துக்கொண்டிருந்தவர் என்பதால், அவருடைய தவற்றினைச் சுட்டிக்காட்டுவதற்கு நாத்தான் இறைவாக்கினர் ஓர் ஆட்டினை உருவகமாகப் பயன்படுத்துகின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசரிடம் உவமைக் கதையைச் சொல்லி முடித்ததும், “இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும்…” என்கின்றார் தாவீது அரசர். உடனே நாத்தான் இறைவாக்கினர், “நீயே அம்மனிதன்…” என்கின்றார்.

 

தொடர்ந்து அவர் தாவீது அரசரிடம், அவருக்கு நேரப்போகிற கேடுகளையும் எடுத்துச் சொல்கின்றார். நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசருக்கு நான்குவிதமான கேடுகள் நேரப்போவதாகச் சொல்கின்றார். ஒன்று, அவருக்கும் பத்சேபாவிற்கும் பிறந்த குழந்தை இறக்கும். இரண்டு, அவருடைய மகன்களான அம்னோன், அப்சலோம்… ஆகியோர் கொல்லப்படுவர். மூன்று, அவருடைய மகள் ‘சூறையாடப்படுவாள்’. நான்கு, அவருடைய வைப்பாட்டிகளும் ‘சூறையாடப்படுவார்கள்’. இதை நாத்தான் இறைவாக்கினர் தாவீதிடம்  சொல்லி முடித்ததும், அவர் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதைத் தொடர்ந்து நாம் சிதித்துப் பார்ப்போம்.

 

 

 

தவற்றுக்காக மனம்வருந்திய தாவீது

 

          நாத்தான் இறைவாக்கினர் தாவீது அரசரிடம் அவர் செய்த தவற்றினைச் சுட்டிக்காட்டியதும், தாவீது “நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்” என்று மனம்வருந்தி அழுகின்றார். உடனே நாத்தான் இறைவாக்கினர் அவரிடம், “ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார். நீ சாகமாட்டாய்” என்கின்றார்.

 

புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.” (1 யோவா 1: 9). தாவீது அரசர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதும், ஆண்டவர் அவரை மன்னிக்கின்றார். அப்படியானால், நாம் கடவுளுக்கு எதிராகவும் சக மனிதர்களுக்கு எதிராகவும் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்கின்றபொழுது, கடவுள் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்குப் புது வாழ்வு தருவார் என்பது உறுதி.

 

சிந்தனை

 

          ‘நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை இறைவன் அவமதிப்பதில்லை’ (திபா 51: 17) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், மனிதர்களாகிய நாம் தவறு செய்யலாம். அப்படித் தவறு செய்கின்றபொழுது, அதை ஒத்துக்கொண்டு இறைவனின் மன்னிப்புக் கேட்டுத் திருந்தி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

–          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

About amirsundar

Hello I am Catholic Diocesan Priest, serving in a parish near Tenkasi in the south down. Palayamkottai is my diocese. I love to share my views as well as very happy to help those who wish to read dailly readings. feel free to share your opinions and views. Let us hold our hands and walk in HIS vineyard. That way i love to fulfil my Priestly Motto. ' GOD IS LOVE. The one who lives in love, lives in God and God in him.'
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment