ஆண்டவரின் திருமுழுக்கு
முதல் ஆண்டு
முதல் வாசகம்
இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4,6-7
ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 29: 1ய,2. 3யஉ-4. 9b-10 (பல்லவி: 11b)
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
1ய இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். 2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி
3யஉ ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். 4 ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி
9b ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் `இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். 10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38
கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும்.
கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 9: 7
அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.
+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17
அக்காலத்தில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூறித் தடுத்தார்.
இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை” எனப் பதிலளித்தார்.
அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.
அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
இயேசுவின் திருமுழுக்கு
தூய ஆவியாரின் வல்லமை நாசரேத்தூர் இயேசுவின்மேல் பொழியப்பட்டது. ஆதலால், தீய ஆவிகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை செய்து, அனைத்து மனிதர்களுக்கும் இயேசு நன்மை செய்து கொண்டே சென்றார்.
“ஆண்டவா நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்”(திபா.29:03) என்பதை மெய்ப்பிக்கும் பொருட்டு இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே, வானத்திலிருந்து கடவுளின் ஆவி அவர்மீது இறங்கியது. மண்ணைச் சார்ந்து தண்ணீர் இருக்கிறது. விண்ணைச் சார்ந்து தூய ஆவியானவர் இருக்கிறார். விண்ணிலிருந்து தூய ஆவியானவர் மண்ணை நோக்கி வரும்பொழுது, நாம் மண்ணிலிருந்து, விண்ணை நோக்கி எழுப்பப்படுகிறோம்.
கடவுள் தரும் அழைப்பு “திருமுழுக்கு அனுபவம்”. திருமுழுக்குப் பெற்றோரைக் கடவுள் பாதுகாத்து வழிநடத்துகிறார். அதனால், நாம் இயேசுவின் ஒளி பெற்று, பல்வேறு வகையான சிந்தனைச் சிறைகளிலிருந்து விடுதலை பெற்று, கடவுள் விரும்பும் நீதியை நிலைநாட்டும்வரை, மனம் தளராமல், பணி செய்வதன் வழியாக, கடவுள் நம்மைக் குறித்து பூரிப்படைவார்.
முன்னுரை
புதிய ஆண்டின் இரண்டாவது ஞாயிறு பலியாகிய இன்று பங்கேற்க வந்துள்ள உங்கள் யாவரையும் அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம்.
திருஅவை இன்று இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவை கொண்டாடி மகிழ அழைக்கின்றது.
இந்த கொண்டாடத்தில் தான் திரியேக தேவனின் பிரசன்னத்தை உணர நற்செய்தியாளர் அழைக்கின்றார். தந்தை தன்மகனை பெருமைப்படுத்துவதையும், ஆவியானவர் இறங்கி வந்து தங்குவதையும் பார்க்கின்றோம்.
நம்முடைய திருமுழுக்கும் இதே முக்கியத்துவம் பெற்றது தான். நாமும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஆவியின் அபிஷேகம் பெற்று, தந்தையினால் சிறப்புற தேர்வு செய்யப்படுகின்றோம். இதனை உணர்ந்து இறைவனை துதிப்போம். நன்றி கூறுவோம். அழைப்புக்கேற்ப வாழ்ந்து சான்று பகர்வோம். அவருடைய மக்களாகவே வாழ்வோம்.
மன்றாட்டு
திருஅவையை ஆசீர்வதியும். திருஅவை அன்பர்கள் திருமுழுக்கின் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்து அதனையே பிறருக்கு போதிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
எமது நாட்டைஆசீர்வதியும். நாட்டை ஆள்வோரையும், அதிகாரிகளையும் ஆசீர்வதியும். தெய்வபக்தி, பயமுள்ள அன்பர்களாக வாழ்ந்து, மக்களை ஏற்றமான வாழ்வில் வழிநடத்தியருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
திருமுழுக்கு பெற்ற அன்பர்கள் நாங்கள், அழைப்புக்கேற்ற வாழ்வின் வழி, என்றும் உம்முடைய மதிப்பிற்குரிய மக்களாக வாழ, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
திருமுழுக்கிலே பெற்ற அருளை பாவ பழைய வாழ்வால் தொலைத்து விடாமல், எச்சரிக்கையோடும், விழிப்போடும் வாழும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.