பொதுக்காலம் 03ஆம் ஞாயிறு 26 01 2020
திருப்பலி முன்னுரை
காரிருளில் நடந்து வந்த மக்களை பேரொளியில் வழிநடத்திய இறைவனின் நற்செய்தியை நம்பிக்கையோடு அறிக்கையிட பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது.
எசாயா இறைவாக்கினரால் இயேசுவின் பணி முன்னறிவிக்கப்படுகிறது. பாதையை செம்மையாக்குங்கள் என யோவானால் மீண்டும் அறிவிக்கப்படுகிறது. விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று இன்றும் அறிவிக்கப்படுகிறது. மனதின் குறையைக் களைந்து, இறைப் பாதையை அறிந்து, நற்செய்தியை நமது வாழ்வாக்குவோம்.
இன்றைய முதல் வாசகத்தில் சுமையாக இருந்த நுகத்தை உடைத்தெறிந்தீர் என்று ஆசீர்வாதமான வார்த்தைகளை வழங்குகிறார் எசாயா இறைவாக்கினர்.
காரிருள் ஒளி பெற்றது கதிரவனால்
மன இருள் மகிழ் பெற்றது மனுமகனால்
துன்பங்களுக்கு துணிவில்லை
தூயவரின் மக்களை நோக்க
எனவே இறைவன் வழங்கும் அக்களிப்பை அணிந்து ஆனந்தம் கொள்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்று இறை பணிக்கு சீடர்களை அழைக்கிறார் இயேசு. இவ்வுலகத்தில் சாதாரண மனிதன் போன்ற வாழ்வே வாழ்ந்தார். ஆனால் தேவ மைந்தனுக்குரிய வல்லமையைக் கொண்டு, அற்புதங்களை நிகழ்த்தினார். மக்களை மீட்க இன்றும் பல சீடர்களை அழைக்கிறார்.
உழைப்பை விடவும் உடைமையை விடவும் உன்னதமான பணி நற்செய்திப் பணி என சீடர்களை அழைக்கிறார். நாமும் அதுபோல வாழவும், நமது வாழ்வே பிறர் விரும்பும் நற்செய்தியாக அமைய வரம் வேண்டி, அன்பின் தேவனிடம் இறைஞ்சுவோம். இப்பலியில் இணைவோம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
1. என் பின்னே வாருங்கள் என்றவரே எம் இறைவா!
எம் தாயாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள் மனிதர்களை அன்பால் பிடிக்கவும், வாழ்க்கை செய்ல்களில் இயேசுவை பிரதிபலிக்கவும், திருப்பணிக்கான வல்லமையை தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. காரிருள் மறைந்து ஒளியால் நிரப்புபவரே எம் இறைவா!
எம் பாரத நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள், காரிருள் சூழ்ந்திருக்கும் நாட்டை ஒளியால் நிரப்ப தேவையான நல்ல செயல் திட்டங்களையும், ஆக்கப் பூர்வமான செயல்களையும் செய்து, பொருளாதாரம், அமைதியில் நாட்டை மேம்படுத்த ஞானம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. நுகத்தை உடைத்தெறிபவரே எம் இறைவா!
குடும்பம், உறவு நாட்டில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள் ஒழியவும், அனைவரும் ஒருமனப்பட்டு ஆழவும், வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்பவர்கள், வாழ்வாதாரத்தைப் பயன்படுத்தி முன்னேறவும், இறையாட்சிப் பணியில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வமாகச் செயல்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. மகிழ்ச்சியை மிகுதியாக்குபவரே எம் இறைவா!
எம் பகுதியில் போதிய இயற்கை கால சூழ்நிலையைத் தந்து, விவசாயம் சிறக்கவும், பொருளாதாரம் மேம்படவும், குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும், மக்கள் இறை பாதையை உணரவும், படிக்கும் மாணவர்கள் ஞானத்தோடு செயலாற்றவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: திருமதி ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
“GOD IS LOVE”
Rev. Fr. Amirtha Raja Sundar J,